பதிவு செய்த நாள்
06
ஏப்
2015
12:04
திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில் நேற்று, உற்சவர் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்; மதியம், மகாபாரத சொற்பொழிவு; இரவு, மகாபாரத நாடகம் நடந்து வருகிறது. திருத்தணி நகர பூ வியாபாரிகள் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் இரவு, புஷ்ப பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. பின், புஷ்ப பல்லக்கில் உற்சவர் அம்மன், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.