பூமியில் விதைத்த நெல் பன்மடங்காகி விளைச்சல் தருவது போல, அக்னியில் சேர்த்த திரவியங்களும் பல மடங்காக அந்தந்த தெய்வங்களைச் சென்று சேர்கிறது என்கிறது சாஸ்திரம். பஞ்சபூதங்களில், ஆகாயத்தில் இருந்து காற்றும், காற்றில் இருந்து அக்னியும், அக்னியில் இருந்து நீரும், நீரில் இருந்து பூமியும் உண்டானதாக வேதம் சொல்கிறது. பூமி தரும் விளைச்சல் கண்ணுக்குத் தெரியும். ஆனால், யாகசாலை நெருப்பில் உண்டாகும் மாற்றத்தை நாம் உணர முடியாது. ஒரு குருநாதர் சீடருக்குத் தெரியாமல் தண்ணீரில் உப்பைக் கரைத்தார். சீடனிடம், இந்த நீரில் உப்பு இருக்கிறதா?எனக் கேட்டார். வெறுமனே பார்த்த சீடன், இல்லை என்று பதில் அளித்தான். சொட்டு தண்ணீரை வாயில் ஊற்றவும், அடடா! கரிக்குதே! என்றான். யாகம் நடத்தும் போது, ஏதோ பொருட்களை நெருப்பில் போடுகிறார்களே என்பது தான் தெரியும். ஆனால், அது தேவர்களை அடைந்து அவர்கள் மூலம் கிடைக்கும் மறைமுக சுகங்களை நம்மால் உணர முடியாது. மழை முதலானவை பெய்வது கூட ஆங்காங்கே நடக்கும் யாகங்களின் சக்தியால் தான்.