பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
05:04
கல்யாணம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டமாகத் தான் இருக்கும்...வேறென்ன! நகை, பண்டம், பாத்திரம் வகையறாக்களுக்கான பணத்துக்குத் தான்! இதுபோல, பெண்ணைப் பெற்ற ஒருவர், நகை போட பணத்துக்குத் திண்டாடிக் கொண்டிருந்தார். அவருக்கு மகாபெரியவர் அனுக்கிரஹம் செய்த சம்பவத்தைக் கேளுங்கள். ஒருசமயம், காஞ்சி மடத்திற்கு பெண்ணைப் பெற்ற ஒருவரும், மாப்பிள்ளையைப் பெற்ற ஒருவரும் தங்கள் துணைவியருடன் மகாபெரியவரைத் தரிசிக்க வந்திருந்தனர். பெண்ணும், மாப்பிள்ளையும் கூட அவர்களுடன் வந்திருந்தனர். மாப்பிள்ளையின் தகப்பனார், பெண்ணைப் பெற்றவரிடம் நான்கு சவரன் நகை அதிகமாகப் போடுங்களேன் என்று கேட்டிருந்தார். ஆனால், இவருக்கோ அந்த நகையைப் போடுமளவுக்கு பணம் கிடைப்பதென்பது குதிரைக் கொம்பாக இருந்தது. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். அவர் நடமாடும் தெய்வமான காஞ்சி மகாப்பெரியவரிடம் தன் வேண்டுதலை வைக்க வந்தார். தரிசனம் செய்ய வந்தவர்களின் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஏழைகளின் மனக்குமுறலை பெரியவர் அறிவார் இல்லையா! அவரது முகக்குறிப்பைப் பார்த்ததுமே, பெரியவர் அவரை அருகில் அழைத்தார். என்ன விஷயம்? என்றார். பெண்ணைப் பெற்றவர் விஷயத்தைச் சொல்லி, நீங்க தான் அனுக்கிரஹம் பண்ணனும் பெரியவா! என்றார். நானோ சந்நியாசி! நீ கேட்பதை என்னால் எப்படி தர முடியும்! சரி..சரி... வீட்டுக்குப் போ, எல்லாம் நல்லபடியாக நடக்கும், என்று ஆசிர்வதித்தார். அப்போது, அந்த மாப்பிள்ளை பையன் முன்வந்தான். சுவாமி! நான் உங்கள் முன்னிலையில் தான் மாலை மாற்ற வேண்டுமென இருக்கிறேன், என்றான். பெரியவர் அவனை ஆசிர்வதித்து அனுப்பி விட்டார். அவர்கள் ஊருக்குப் போய் விட்டார்கள். அன்றிரவு மாப்பிள்ளையின் தகப்பனார் கனவில், ஒரு சந்நியாசி தோன்றினார். பெண்ணின் தகப்பனார் கொடுப்பதை வாங்கிக் கொண்டு, கல்யாணத்தை முடி, என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாளே, பெண் வீட்டுக்கு வந்த அவர், நீங்க எதுவுமே தர வேண்டாம். பெண்ணைக் கொடுத்தால் போதும், எனச் சொல்லி திருமண நாளைக் குறித்து விட்டார். பெண்ணின் அப்பா, உங்க கனவில் வந்த சந்நியாசி வேறு யாருமல்ல! மகாபெரியவர் தான் வந்திருக்க வேண்டும். அவரிடம் நான் வைத்த கோரிக்கை நிறைவேற்றி விட்டது. திருமணமும் நல்லபடியாக முடிந்தது. மணமக்கள், பெரியவரிடம் ஆசி வாங்கச் சென்றனர். அந்த நேரத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குருக்கள் நாகசுவாமி சிவாச்சாரியார் இரண்டு மாலைகளும், பிரசாதமும் பெரியவருக்கு கொண்டு வந்தார். அந்த மாலைகளை மணமக்களிடம் கொடுக்கச் சொன்ன பெரியவர், நீ எங்கிட்டே சொன்னது போல மாலையை மாத்திக்கோ! உன் விருப்பம் நிறைவேறிடுச்சு இல்லையா! என்றார். எவ்வளவு பெரிய பாக்கியம் பாருங்கள்! பெண்ணைப் பெற்று, பணத்துக்காக திண்டாடுபவர்கள் பெரியவரிடம் மானசீகமாக வேண்டுங்கள். உங்கள் வீட்டிலும் மங்களமேளம் ஒலிக்கும்.
(மகான் காஞ்சிப் பெரியவர்)