பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் அருகே, நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவி லில் நடந்த சித்திரை திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற நாணப்பரப்பு மகா மாரியம்மன் கோவிலில் கடந்த, 12ம் தேதி காப்புகட்டுடன் விழா துவங்கியது. கம்பம் நடுதல், 26ம் தேதி, வடிசோறு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, புகளூர் மற்றும் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் அபிஷேகம், பால்காவடி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் நடந்தது. நேற்று பகல், 12 மணிக்கு, காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்திய பக்தர்கள், ஊர்வலமாகச் சென்று நேற்று முன்தினம் மதியம், 1 மணியளவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் ஸ்வாமியை வழிபட்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, பூஜைகள் செய்த பின், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் போட்டு பூஜை செய்தனர். பின்னர் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராடல் நிகழ்சியும் நடந்தது. இதில், வேலாயுதம்பாளையம், செம்படாபாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.