பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
03:04
விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் மிக உயர்ந்தது நரசிம்ம அவதாரம். ஏனெனில், ஒரு பக்தனின் சொல்லைக் காப்பாற்ற விஷ்ணு இந்த அவதாரத்தை நிகழ்த்தினார். மனிதனுக்கு வாக்கு சுத்தம் மிக முக்கியம். ஒன்றைச் சொன்னால், அதைச் செய்தாக வேண்டும். வாக்கு தவறினால் அவனுக்கு மதிப்பு போய்விடும். தசரதர் கைகேயிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற, தன் உயிரையும் கொடுத்ததால் தான், இன்றும் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். இதே போல, பிரகலாதனின் வார்த்தையைக் காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார் நரசிம்மன். “அடேய் பிரகலாதா! எங்கேயடா இருக்கிறான் உன் விஷ்ணு? என்று கேட்கிறான் இரண்யன். “தந்தையே! அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான். ஏன்...எங்கும் வியாபித்திருக்கிறான். ஒவ்வொரு துகளிலும் அவன் உட்கார்ந்திருக்கிறான், என்றான் பிரகலாதன்.இதைக்கேட்ட விஷ்ணு பரபரப்பாகி விட்டார். “இந்தப் பொடியன், நாம் எங்கிருக்கிறோம் என கையைக் காட்டுவானோ! அங்கிருந்து உடனே வெளிப்பட்டாக வேண்டுமே! எனவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து காத்துக் கிடந்தான்.
பிரகலாதன் தூணைக் கை காட்ட, இரணியன் அதை உடைத்தான். மனித உடலும், சிம்ம முகமும் கொண்டு நரசிம்மனாய் அவன் வெளிப்பட்டான். ‘நரன் என்றால் ‘மனிதன். ‘சிம்மம் என்றால் ‘சிங்கம். இதனால் தான் அவனை ‘நரசிம்மன் என்றும், ‘நரசிங்கன் என்றும் சொல்வார்கள். மதுரை அருகே அவன் கோயில் கொண்டுள்ள ஊருக்கே ‘நரசிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.தூணிலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருணைக்கடல், இரணிய வதத்தை முடித்த பிறகு, பிரகலாதனிடம், “நீ ஏன் தூணைக் காட்டினாய், துரும்பைக் காட்டியிருக்கக் கூடாதா? என்றான். “ஏன் இப்படி சொல்கிறீர்கள்? என்ற பிரகலாதனிடம், தூண் என்பதால், இரணியன் அதை உடைக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. துரும்பு என்றால் அதைக் கிள்ளியெறிந்தவுடன் பிரசன்னமாகி இருப்பேனே! என்றானாம்.ஆம்.. நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை. அவரிடம் வைக்கும் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறும். லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைசொல்லி வழிபடுவோர் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நரசிம்மரும் ஆதிசங்கரரும்: பாரதத்தின் பல்வேறு தலங்களில் தன் பாதம் பதித்து புனிதப் படுத்திக் கொண்டிருந்த ஜகத் குரு ஆதிசங்கரர், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை தரிசித்தார். சிவனாந்தலகரியால் மல்லிகார்ஜுனரை குளிர்வித்தார். அந்த ஊரிலேயே சில நாட்கள் தங்க விரும்பினார். அதற்குக் காரணம் இருந்தது. சொந்த மதத்தைச் சீரமைக்கும் காரணம். அந்தப் பகுதியில் அப்போது காபாலிகர்கள் என்ற பிரிவினர் வாழ்ந்து வந்தார்கள். பைரவரை வணங்கும் அவர்கள் நரபலிப் பிரியர்கள். மனித மாமிசத்தைக்கூட உண்ணும் வழக்கமுடையவர்கள். சுடுகாட்டில் உக்ரத்துடன் சிவபெருமானை வழிபடுவார்கள். யாராவது அந்தப் பக்கம் போனால் அவர்களைப் பிடித்து பலி போட்டு விடுவார்கள். இறைவனுக்கு நரபலி தருவது மிகவும் நல்லது என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் வசிப்பிடமும் சுடுகாடுதான். அதெல்லாம் தவறு என்று அவர்களுக்கு உணர்த்த ஆசைப்பட்டே சங்கரர் அங்கே தங்க விரும்பினார் தங்கினார். ஒரு காபாலிகனுக்கு சங்கரர் மேல் மிகுந்த கோபம் இருந்தது. தங்களது வழிபாட்டையெல்லாம் இந்த மொட்டைச் சாமியார் கண்டிக்கிறாரே என்பதால் எழுந்த ஆத்திரம் தான் அது. அதனால் ஒரு முடிவுக்கு வந்தான். சங்கரரை நரபலி கொடுத்துவிடலாம் என்ற முடிவு.
அதிகாலையில் நீராடிய பின்னர் கொஞ்ச நேரம் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சங்கரரின் வழக்கம் ஆச்சார்யாள் அமைதியை விரும்பும் அந்த நேரத்தில் சிஷ்யர்கள் கூட அருகில் இருக்கமாட்டார்கள். அந்த விஷயத்தை எப்படியோ தெரிந்து கொண்டான். காபாலிகன், மெல்லிய இருள் விலகும் அந்த நேரத்தில் சங்கரரைத் தீர்த்துக் கட்டிவிடலாம். என்று முடிவெடுத்தான். சரியாய் குறிப்பிட்ட நேரத்தில் வந்து நின்றான் காபாலிகன். அவன் கையில் பளபளக்கும் அரிவாள் ஒன்று மின்னிற்று கண்மூடி தியானத்தில் இருந்த ஆச்சார்யாளை உற்றுப் பார்த்தான். சிவப்பழமாக தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது சங்கரரின் முகம். அந்தப் பால் வடியும் முகத்தைப் பார்த்த பிறகு, காபாலிகன் ஒரு முடிவுக்கு வந்தான் பலி கொடுப்பதைச் சற்றுநேரம் தள்ளிவைக்க நினைத்தான். அருள் தவழும் முகத்தைப் பார்த்ததும் திருந்தி விட்டானோ என்று நினைக்க வேண்டாம். மனித மாமிசம் புசிப்பவனிடம் நல்ல விஷயம் எப்படியிருக்கும்? பலியிடுதலில் ஒரு வழக்கம் உண்டு. கிராமத்துக் கோயில்கள் சிலவற்றில் ஆடு பலியிடுவார்கள். அப்போது பூசாரி என்ன செய்வார்? மஞ்சள் தண்ணீரை ஆட்டின் முகத்தில் பளிச்சென்று அடிப்பார் ஆடு, அந்தத் தண்ணீரின் குளிர்ச்சியாலோ என்னவோ, தலையை ஆட்ட பலி எடுக்க ஆடு சம்மதித்து விட்டது என்று வெட்டிவிடுவார்கள். அதாவது பலியிடப்படுபவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டு பலியிடுதல்.
காபாலிகன், தியானத்திலிருக்கும் சங்கரரைப் பார்த்துச் சும்மாயிருந்ததும் அதற்குத்தான். மெல்லக் கண்விழித்தார் ஜகத்குரு. எதிரில் கடும் தோற்றத்துடன் காபாலிகன். என்ன சகோதரனே நலமா? என்றார் ஆதிசங்கரர். காபாலிகன் திடுக்கிட்டான். அத்தனை ப்ரியமாய் யாரும் அவனை அழைத்ததில்லை ஆனாலும் அவனது வளர்ப்புமுறை வேறாயிற்றே! சாமியாரே, நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன் கரடுமுரடான குரலில் கத்திப்பேசினான். அப்படியா? புன்சிரித்தது ஞானப்பழம். நீ தூங்கிக்கிட்டிருக்கும்போதே நான் உன்னை வெட்டிப் போட்டிருப்பேன். ஆனா, உன் மூஞ்சியைப் பார்த்ததும் நீ பெரிய ஞானின்னு தெரிந்தது. உக்ர பைரவரைக் கும்பிடுறவன் நான். அந்த பைரவருக்கு நாட்டை ஆளுற ஒரு சக்ரவர்த்தியையோ அல்லது எல்லாம் தெரிந்த சன்னியாசியையோ நரபலி கொடுத்தா, பைரவர் காட்சி தந்து, எனக்கு எல்லா சக்திகளையும் கொடுப்பார். என்னால் சக்ரவர்த்திகிட்ட எப்படி நெருங்க முடியும்? நீதான் இப்ப வசமா மாட்டியிருக்கே ஆனா, அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு யாரை பலி கொடுக்கிறோமோ, சாகுறதுக்கு அவங்களோடு சம்மதமும் இருக்கணும். அப்பத்தான் பைரவர் வரம் தருவார். சங்கரர் மெல்லப் புன்னகைத்தார் நீ என்னை எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்தால் பலியிட என்னைத் தர நான் முழுவதுமாகச் சம்மதிக்கிறேன். ஆனாலும் காபாலிகனுக்குச் சந்தேகம், நெசமாத்தான் சொல்றியா நீ? இல்ல, என்னோட முரட்டு உருவத்தைப் பார்த்து பயந்துகிட்டு உளர்றியா? சங்கரப்பழம் மீண்டும் புன்னகைத்தது நண்பனே என்னை பலியிடுவதன் மூலம் உனக்கு பகவான் காட்சியளிப்பார் என்றால் நான் அதற்கு சம்மதிக்கிறேன் என்றார்.
முட்டாள் காபாலிகன், சங்கரர்தான் அந்த பகவான் என்பது புரியாத மாபாவி. அதிர்ஷ்டக்கட்டை! என்னப்பா யோசிக்கிறாய்... நான் தயார், உலகிலேயே மனித உடலுக்குத்தான் மதிப்பு இல்லை என்பார்கள். யானை இறந்தால் அதனிடம் உள்ள தந்தங்கள் நல்ல விலை போகும் மயில் இறந்தால் அதன் தோகை கிடைக்கும் நரி இறந்தால்கூட அதன் பல்லை உன்னைப் போன்ற காபாலிகர்கள் கழுத்தில் அணிவீர்கள். ஆனால், மனித உடல்? பதிப்பே கிடையாதப்பா. அப்படிப்பட்ட உடலால் உனக்கு ஒரு பயன் கிடைக்கிறது. என்றால் எனக்கும் அதில் சந்தோஷம்தானப்பா, சீக்கிரமாய் என்னை பலி கொடுத்துவிடு. ஆற்றுக்குக் குளிக்கச்சென்ற என் சீடர்கள் திரும்பி வரும் நேரமாகிவிட்டது. அவர்கள் வந்தால் உன்னைத் தடுக்க முயற்சிப்பார்கள். ம். ஆகட்டும் என்ற சங்கரர் சம்மணமிட்டு அமர்ந்த படி கண்களை மூடிக்கொண்டார். காபாலிகனுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தன் கனவு நனவாகப் போகிற குதூகலம் தன் கூர்மையான அரிவாளை உருவினான். காபாலிகன் உக்ர பைரவரை பிரார்த்தித்தான் தனக்கு சகல செல்வங்களும் சகல சித்திகளும் கிடைக்க வேண்டுமென்று வேண்டினான். அரிவாளைக் தலைக்கு மேலே தூக்கினான்.
ஆ என்ற அலறல் சத்தம்!
சத்தம் கேட்டுக் கண்விழித்தார் ஜகத்குரு ஆதிசங்கரர்.
எதிரில் அவர் கண்ட காட்சி அற்புதமான காட்சி!
மகாவிஷ்ணு உக்ர நரசிம்மராக எதிரில் நின்று கொண்டிருந்தார். அவருடைய கழுத்தில் மாலையாக ஹிரண்யனா?.... இல்லை. காபாலிகன் நாராகக் கிழிக்கப்பட்ட காபாலிகன்.
எழுந்து நின்றார் சங்கரர், எதிரில் நரசிம்ம மூர்த்தியைக் காணவில்லை. பெருமாள் நின்ற அந்த இடத்தில் பத்மபாதர் நின்று கொண்டிருந்தார். அவரது காலடியில் காபாலிகனின் சடலம் கிடந்தது. ஆனால், பத்மபாதர் எதுவுமே நடவாததுபோல் தூக்கத்தில் நடப்பவர்போல் காட்சியளித்தார்.
என்ன நடந்தது பத்மபாதா? என்றார், ஜகத்குரு.
ஒன்றுமே தெரியவில்லை குருதேவா குளித்துவிட்டு நந்தவனத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தேன் திடீரென தலைசுற்றியது போல இருந்தது. விழிப்பு வந்து பார்த்தால், இதோ இங்கே நிற்கிறேன் இந்தக் காபாலிகனைக் கொன்று போட்டிருக்கிறேன். எப்படியென்றே தெரியவில்லை என்றார் பத்மபாதர் குழப்பத்துடன்.
சங்கரருக்கு எல்லாம் புரிந்தது.
பத்மபாதா. நீ ஒன்றும் செய்யவில்லை எல்லாம் செய்தது நரசிம்மர்தான் நீதான் நரசிம்ம பக்தனாயிற்றே. உபாசகனாயிற்றே முன்பு நான் மன்னனின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த போது, என் உடலுக்கு யாரோ தீவைக்க என் கை கருகியது. நீ சொல்லி நான் நரசிம்மரை பூஜித்து கையைத் திரும்பப் பெற்றேன் உனக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாகியிருக்கிறது. என்று நினைக்கிறேன்.
குருதேவா நான் காட்டில் ஒருமுறை நரசிம்மரைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தேன். அப்போது வேடன் ஒருவன். என்ன செய்கிறீர்கள்? என்று என்னிடம் கேட்டான். அவனிடம் விளையாட்டாக நரசிங்கத்தைக் தேடி வந்திருக்கிறேன். என்றேன் அதைத் தான் கண்டுபிடித்துத் தருவதாக அந்த வேடன் கிளம்பினான் முழு நம்பிக்கையுடன் சென்ற அவன். நிஜமாகவே நரசிங்கத்தைக் கட்டி இழுத்து வந்துவிட்டான். அப்போதுகூட நரசிங்கம் என் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது. நரசிம்ம மந்திரம் எனக்கு உபதேசமாகியிருக்கிறது என்பது பரவசத்துடன் கை கூப்பினார் பத்மபாதர்.