பதிவு செய்த நாள்
02
மே
2015
11:05
அந்தியூர்: செம்முனீஸ்வரர் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை பலி கொடுத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பூனாச்சி அடுத்த பூசாரியூர், செம்முனீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா, கடந்த, 14ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும், செம்முனீஸ்வரர், வாமினி, பூமினி, மன்னாதசாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. முக்கிய விழாவான குட்டிக்குடி திருவிழா, நேற்று நடந்தது. பில்லி சூனியம், பேய், பிசாசு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், இக்கோவிலுக்கு வந்து பிரச்னைக்கு தீர்வு கோரி வேண்டுதல் செய்கின்றனர். தீர்வு ஏற்பட்டால், ஆட்டுக்குட்டியை பலி கொடுக்கின்றனர்.
குழந்தையின்மை, திருமணம் தடை, வழக்கு நிலுவை போன்றவை சாதகமாக நிறைவேறுவதற்கும் வேண்டுதலை வைத்து, ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கின்றனர். பிரச்னைக்கு தீர்வு கிடைத்தவர்கள், 2,000த்திற்கும் மேற்பட்டோர், ஆட்டுக்குட்டிகளுடன் நேற்று கோவிலுக்கு வந்தனர். பிறந்தது முதல், ஒரு வயது வரையுள்ள ஆட்டுக்குட்டிகளை பலியிட காத்திருந்தனர். நீண்ட தூரத்துக்கு கட்டைகள் கட்டி ஒழுங்குபடுத்தி, ஒருபுறம் பக்தர்கள் ஆட்டுக்குட்டியுடனும்; மறுபுறம், ஆட்டுக் குட்டியை வெட்டி ரத்தம் குடிக்கும் பூஜாரிகளும் நின்று கொண்டிருந்தனர்.
பலி கொடுத்த ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை, பூஜாரிகள் குடித்துவிட்டு ஆட்டம் ஆடினார். குழந்தை வரம் கேட்டு வந்த பக்தர்கள், பலி கொடுத்த ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை புடவையில் பூசி, சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், ஆட்டுக்குட்டிகளை தூக்கிய பக்தர்களாலும், ரத்தம் தோய்ந்த ஆடை அணிந்திருந்த பூஜாரிகளாலும் நிரம்பியிருந்தது. வரும், 17ம் தேதி, மறு வன பூஜையுடன் விழா நிறைவடைகிறது.