பதிவு செய்த நாள்
04
மே
2015
10:05
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று நடந்த சிறப்பு மகா தரிசனத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த, 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், நடராஜர் தேரோட்டம் நடந்தது.தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து, இரவு, 7:00 மணிக்கு கிழக்கு சன்னிதியில் நிலைக்கு வந்தது. மாணிக்கவாசகர் தேர் முன் எழுந்தருள, திருவெண்பா பாடப்பெற்று, மகா தீபாராதனை நடந்தது. நடராஜப் பெருமான் சமேத சிவகாமசுந்தரி அம்மன், தேரிலிருந்து இறங்கி ஆனந்த நடனமாடியவாறு ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு இரவு, 11:00 மணிக்கு லட்சார்ச்சனை, அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சொர்ண அபிஷேகம் நடந்தது. பின், சுவாமி திருஆபரணம் அணிந்து ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள்மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை, 11:00 மணிக்கு தீட்சிதர்கள் சிற்சபையில் ரகசிய பூஜை, 12:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, மண்டகப்படி சிறப்பு பூஜை, பகல், 1:30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.பகல், 1:45 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜசபையில் இருந்து தங்க மஞ்சத்தில் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு காட்சியளித்தார்.அப்போது பக்தர்கள், தில்லைக் கூத்தனே, பொன்னம்பலத்தானே, ஆடல் வல்லானே என, கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். பின், நடராஜர் சிற்சபை பிரவேசம் அடைந்து, தீபாராதனை நடந்தது.