பதிவு செய்த நாள்
04
மே
2015
11:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் திருத்தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த மாதம் 27ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. 5ம் நாள் உற்சவமான கருடசேவை, கடந்த 1ம் தேதி நடந்தது. 7ம் நாள் உற்சவமான திருத்தேரோட்டம், நேற்று நடந்தது. இதை ஒட்டி, வழக்கமான வழிபாட்டிற்கு பின், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, ரத பிரதிஷ்டை ஹோமம் நடந்தது. சுவாமி, ராஜ அலங்காரத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன், காலை, 6:00 மணிக்கு, அலங்கார திருத்தேரில் எழுந்தருளினார்.தேரில், பூதத்தாழ்வார் அளித்த ஆடையை, சுவாமிக்கு சாற்றி, மரியாதை அளித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின், வேதபாராயணம், மங்கள இசை முழங்க, கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர், 8:50 மணிக்கு, நிலையிலிருந்து புறப்பட்டது. ராஜ வீதிகள் வழியே உலா வந்த சுவாமியை, பக்தர்கள் வழிபட்டனர். 11:40 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.