பதிவு செய்த நாள்
04
மே
2015
11:05
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில், நேற்று காலை, துரியோதனன் படுகளமும்; மாலையில் தீ மிதி திருவிழாவும் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தொடர்ந்து, தினசரி மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நடத்தப்பட்டது. நேற்று காலை, குருஷேத்திர, 18ம் போர்க்களம் நிகழ்வான, துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் எழுப்பப்பட்ட அக்னி குண்டத்தில், விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதே போல், ராஜாநகரம் செதுலுார் விருப்பாட்சியம்மன் கோவிலிலும், நேற்று மாலை, தீ மிதி திருவிழா நடந்தது. இன்று மாலை (திங்கட்கிழமை) ராஜாநகரம் (கிழக்கு) கிராமத்தில், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.