பிரம்மாவின் புத்திரரான நாரதருக்கு கோயில்களில் சன்னதி இருப்பதாக தெரியவில்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சண்முகர் கோயிலில் இவர் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது நாரதர், தன் தந்தை தவறு செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால், அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தும்புராவும் வளைந்தது. எனவே, இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தும்புரா வளைந்திருக்கிறது. இக்கோயில் திருவிழாவின் போது, சுவாமி முன்பாக இவரும் உலா செல்வது சிறப்பு.