சபரிமலை : பிரபல மலையாள சினிமா நடிகர் மோகன்லால் சபரிமலையில் சுவாமி தரிசனம் நடத்தினார். வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை தற்போது திறந்துள்ளது. நேற்று அதிகாலை நடை திறந்து நெய்யபிஷேகம் ஆரம்பித்தது. இது வரும் 19-ம் தேதி பகல் 12 மணி வரை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெறுகிறது. மதியம் சகஸ்ரகலச பூஜையும், களபபூஜையும் நடைபெறுகிறது. முன்னணி மலையாள சினிமா நடிகர் மோகன்லால் நேற்று அதிகாலை சபரிமலை வந்தார். அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம் நடத்திய பின்னர் கணபதிஹோமத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். சபரிமலை நடை வரும் 19-ம் தேதி இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.