பதிவு செய்த நாள்
17
ஜூன்
2015
11:06
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்கணக்கான பக்தர்கள் திரண்டதால் ஒரு மணி நேரம் முன்னதாக உற்சவத்தை துவக்கினர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்தனர். காலை முதல் பக்தர்களின் கூட்டடம் அதிகம் இருந்தது. இரவு 9 மணிக்கு கோவிலை சுற்றி உள்ள பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 11 மணிக்கு துவக்கினர்.
ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், பக்தர்களும், கோவில் பூசாரிகளும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இரவு 12.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர் மற்றும் அறங்காவலர்கள் உற்சவ ஏற்பாடுகளை செய்தனர்.
செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, புதுச்சேரி, வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். இதில் இரண்ட லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.