பதிவு செய்த நாள்
22
ஜூன்
2015
10:06
எல்லாம் வல்ல இறைவனை வாயாரப்பாடி, மனதாரத் துதித்து, அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம், ஆராதனை என்று கொண்டாடுகின்றோம். இறைவழிபாட்டில் தூபம் இடுதல் மிகப் பெரிய புண்ணியச் செயல், மயிலாடுதுறையில் வசித்த குங்கிலியக் கலிய நாயனார், குங்கிலியப் புகை கமழச் செய்வதையே தம்முடைய திருப்பணியாக மேற் கொண்டிருந்தார் என்று விவரிக்கிறது பெரிய புராணம். தூபம் - அறிவியல் உண்மைகள்: சுற்றுப்புறக்காற்று சாம்பிராணி புகையால் தூய்மையடைகிறது. வளிமண்டல மாற்றத்தினால், உணவு முறையால் ஏற்படும் கபத்தை நீக்கி மேலும் கபம் சேராமல் தடுக்கிறது. நோய்க்கிருமிகள், கொசுக்கள் அழிகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் தலைக்குளித்தவுடன் தலையில் நீரேற்றம் உண்டாகாமல் தடுக்க சாம்பிராணி புகை போட்டுக் கொள்கிறார்கள்.
மனத்தை தூபக் கலமாக்கி, அதில் அறச் சிந்தனைகளை நிரப்பினால் இறையருள் நம்மைச் சுற்றிலும் கமழும் என்பது தாத்பர்யம். அதுபோல், நம் உள்ளம் ஒரு தீபக்கலம், அதில் நற்குணம் நிரப்பி, இறை சிந்தனையில் மனதை ஒருமுகப்படுத்த, அது ஞானச் சுடராய் பிரகாசிக்கும். அப்போது இறைவன் ஆனந்த ரூபியாகக் காட்சியளிப்பார். தீபாராதனை-அறிவியல் உண்மைகள்: தீபாராதனை செய்யும்போது சிலையின் மின் கடத்தும் திறன் நிலைப்பட்டு இருக்கும். விக்கிரகத்தின் முன் உயர்ந்தும், தாழ்ந்தும், பக்க வாட்டிலும் தீபாரதனை செய்யும்போது. அந்த ஒளியை நம் கண்கள் பார்க்கின்றன. இது கண்களுக்கான சிறந்த பயிற்சியாகவும் அமைகிறது. தீபாராதனையின்போது கன்னங்களில் போட்டுக்கொள்கிறோம். கன்னம் மற்றும் உள்ளங்கைகளில் உள்ள நரம்பு முடிச்சுகளுக்கு மூளை, வயிறு மற்றும் இதயத்தோடு தொடர்பிருக்கிறது. அதனால், இந்த மூன்று உறுப்புகளும் சக்தி பெறுகின்றன. இனி, கோயிலுக்குப் போகும்போது தீபாரானையின் போது கண்களை மூடாமல் கண்ணாரசேவித்து இறையருளோடு நல்ல பலன்களைப் பெறுவோம்.
கற்பூரத்தின் சிறப்பு: கற்பூரத்துக்கு மட்டும் ஏனப்பா அத்தனை மரியாதை? என்று வினவினான் மகன். இறைவனின் அழகுத் திருக்கோலத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்க கற்பூரம் தன்னையே தியாகம் செய்வதால்தான் கற்பூரத்துக்கு இத்தனை மரியாதை னு அப்பா சொன்னார். உலகில் மனிதப்பிறவி எடுத்த அனைவரும் கற்பூரத்தைப் போல அடக்கமும், தியாகமும் உள்ளவர்களாக வாழ்ந்து நல்ல காரியத்துக்காக தன்னையே தியாகம் செய்ய வேண்டும்.