கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையம், எல்லைக்காளி அம்மன் கோவிலில் நேற்று நடந்த 115ம் ஆண்டு செடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். செடல் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் எல்லைகட்டு உற்சவம் நடந்தது. நேற்று 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோவிலில் இருந்து ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலுக்கு வரிசை எடுத்துச் சென்று, அங்கு பெண்ணையாற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கரகங்கள் அலங்கரித்து ஊற்றுக்காட்டு மாரியம்மனுடன் வீதியுலாவாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பகல் 2:00 மணிக்கு மேல் அம்மனுக்கு 1008 குடம் நீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு மகா தீபாராதனையும், சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவமும் நடந்தது. விழாவில, பக்தர்கள் செடல் போட்டும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை வேம்பு அரசு திருக்கல்யாணம் நடந்தது.