கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் சிலை திருட்டில் 9 பேர் கைது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2015 04:08
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் கடந்த ஜூலை 13ம்தேதி இரவு கோயில் நடராஜர் உற்சவர் சிலை வைக்கப்பட்டிருந்த அரையின் பூட்டு உடைக்கப் பட்டு ஐந்தரை அடி உயரம் உள்ள நடராஜர் சிலை மட்டும் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் நேற்று முட்டம் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் பயணம் செய்த 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததும் காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட சுவாமி சிலை இருந்தது அவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டதில் திருவாரூர் மாவட்டம் கீரனூரை சேர்ந்த அபினேஷ் (21), சிலம்பரசன் (21), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருநாதன் (25), பிரேம்குமார்(26), தர்மேந்திரன்(31), கங்கேஸ்வரன்(34) என்பதும் இச்சம்பவத்தில் சிறுபுலியூரை சேர்ந்த மணிவண்ணன்(21),மணிகண்டன்(19),பி ரபாகரன்(25) ஆகியோர் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும் உடைந்த நிலையிலிருந்த சிலை கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் திருடியது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து உடைந்த நிலையில் இருந்த நடராஜர் சிலை மற்றும் திருட்டு பயன்படுத்திய 2 காரை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அபினேஷ் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.