Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் ... தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-5) தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் ...
முதல் பக்கம் » தெரிந்த பாரதம்.. தெரியாத பாத்திரம்!
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-4)
எழுத்தின் அளவு:
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் (பகுதி-4)

பதிவு செய்த நாள்

30 செப்
2015
03:09

காசி ராஜனின் சுயம்வர மண்டபத்திலே பீஷ்மர்! அதைக்கண்ட அவ்வளவு அரசர் பெருமக்களிடமும் அதிர்ச்சி! அடுத்த அதிர்ச்சியாக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பை, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூன்று பேரையும் தன் வாள் முனையில் மடக்கி ரதத்தில் ஏற்றி அஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டு விட்டார். அந்த நாளில் அரசர்களிடையே, இப்படி கவர்ந்து மணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ராட்சஷ விவாகம் என்பார்கள். இதைப்போல, இன்னும் ஏழுவகைத் திருமணங்கள் இருந்தன. ஆனால், எந்த விவாகமாக இருந்தாலும்... அதில் அந்த பெண்ணின் விருப்பம் முக்கியம். பீஷ்மர் தன் தம்பியின் பொருட்டு, இம்மூன்று பேரையும் கவர்ந்து செல்வதைப் பொறுக்காமல், சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த அரசர்கள் பீஷ்மரை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டனர். ஆனால், அவரின் வீரத்தின் முன்னால் அவர்கள் தெறித்து விழுந்தனர். சவுபல தேசத்தின் அரசன் சால்வன், கடத்தப்பட்ட அம்பையின் காதலன். அவன் மட்டும் விடாமல் பீஷ்மரின் ரதத்தை பின்தொடர்ந்தான். பாணங்களால் அவரை வீழத்தவும் முயன்றான். ஆனால், இறுதி வரை அவனால் முடியாமல் போயிற்று.ரதத்தில் இருந்த அம்பையும், சால்வன் தோற்று திரும்பச் செல்வதைக் கண்ணீருடன் பார்த்தாள். ஒருவழியாக பீஷ்மர், வருங்கால அஸ்தினாபுர ராணிகளுடன் அரண்மனை புகுந்தார். அந்த மூவரிடத்திலும் அப்போது தான் தன் தம்பி விசித்திர வீரியன் பற்றிக் கூறினார்.

இளவரசிகளே! உங்களை நான் என்பொருட்டு கவர்ந்து வரவில்லை. என்தம்பியும்,  அஸ்தினாபுரத்து அரசனுமான விசித்திர வீரியனுக்காகவே கவர்ந்து வந்தேன். உங்களால் எங்கள் வம்சம் விருத்தியடைந்து இந்த நாட்டு மக்கள் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன், என்றார். அவரின் கருத்தை அம்பிகையும், அம்பாலிகையும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அம்பை பீஷ்மரைப் பார்த்துக் கண்ணீர் விட்டாள். பீஷ்மரே! நீங்கள் என் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டீர்கள். நான் சவுபல அரசன் சால்வனை விரும்புகிறேன். சுயம்வரத்தில் அவருக்கே மாலை சூட எண்ணியிருந்தேன். இதை அறியாமல் நீங்கள் என்னைக் கவர்ந்து வந்தது பெரும்பிழை. இது நீதியாகாது, என்றாள். பீஷ்மர் ஆடிப்போனார். அவர் துளியும் எதிர்பார்த்திராத நிலைப்பாடு. பெண்களிடம் சினேகம், அவர்களை ரசிப்பது, அவர்கள் தொடர்பான காதல் தொடர்பான உணர்வுகளுக்கெல்லாம் இடமே இல்லாத, சத்திய வாழ்வு வாழ்பவராக இருந்ததால், இப்படி ஒரு காதல் சிக்கல் உருவாகக்கூடும் என்பதை அவரால் யூகிக்க முடியாமல் போய்விட்டது.அம்பையின் கண்ணீரும், கோபமும் பீஷ்மரை சிந்திக்க வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தவராக, பெண்ணே நீ சால்வனை மணந்து கொள். உன் காதலை நான் கெடுக்கத் தயாரில்லை. நீ போகலாம், என்றார்.

அம்பைக்கு தன் காதல் தப்பி பிழைத்துவிட்ட சந்தோஷம். அதே சமயம் அம்பாலிகையும், அம்பிகையும் விசித்திரவீரியனை மணந்து கொண்டனர். அம்பை தன் காதலன் சால்வனின் நாட்டுக்கு ரதமேறி சென்றாள். ஆனால், பாவம்.....! அவள் வாழ்வில் விதி விபரீதமாக விளையாடத் தொடங்கியது. தன் முன் வந்து நின்ற அம்பையை ஏற்க அவன் மறுத்து விட்டான். உன்னை நான் எதிரியிடம் இருந்து வெல்ல முடியாதவனாகி விட்டேன். தர்மப்படி நீ பீஷ்மரின் உடைமையாகி விட்டாய். உன்னைக் கவர்ந்து சென்றவன் மணப்பது தான் நியாயம். உனக்கும் அது தான் அழகு, என்று சொல்ல அம்பைக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆனது. வேறு வழியின்றி மீண்டும் அஸ்தினாபுரத்திற்கே திரும்பினாள். பீஷ்மரிடம் நடந்ததைச் சொன்னாள். என்னை நீங்கள் கவர்ந்து வந்தபடியால், எவருமே என்னை மணம்புரிய மறுப்பார்கள் என்பது தான் இப்போது என்நிலை. எனவே, என்னைக் கவர்ந்து வந்த நீங்களே மணந்து கொள்ளுங்கள், என்றாள். பீஷ்மர் அவளிடம், அம்பா! நான் ஜிதேந்திரியன். இப்பிறப்பில் எவரையும் மணக்க மாட்டேன் என்று சத்திய பிரக்ஞை கொண்டிருப்பவன். அதனால், உன்னை மட்டுமல்ல யாரையும் நான் எண்ணத் தயாரில்லை. சால்வனின் கருத்து சரியாக இருக்கலாம். ஆனால், உன்னை நான் கவர்ந்தது நான் மணப்பதற்காக அல்ல.

இந்த விஷயத்தை நீ அவனிடம் மீண்டும் சென்று சொன்னால் உனக்கு விமோசனம் பிறக்கும், என்றார்.அம்பையும் அவர் சொன்னது போல செய்ய சால்வன் ஏற்கனவே சொன்ன பதிலையே திரும்பச் சொன்னான். மண்ணில் கைதவறி விழுந்த பதார்த்தத்தை திரும்ப எடுத்து உண்ண முயல்வது எப்படி இழுக்கான செயலோ.... அப்படித்தான் நான் உன்னை மணப்பதும் ஆகும். எனவே, என்னை மன்னித்து விலகிச் செல் , என்றான். சால்வனின் பதிலால் அம்பை விக்கித்துப் போனாள். நடுத்தெருவில் நிற்பவள் போல் ஆனாள். அம்பைக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அவளுக்குள் பெரும் கோபமாக உருவெடுத்தது. பீஷ்மரிடம் திரும்பிய அவள்,ஒரு பெண்ணாகிய என் பாவத்தை கொட்டிக் கொண்ட விட்ட உங்களைச் சும்மா விடமாட்டேன். நீங்கள் நினைத்தால் மட்டுமே மரணிக்கலாம் என்னும் வரம் பெற்ற உங்களுக்கு, என்னாலேயே மரணம் சம்பவிக்க வேண்டும் என்பதே இனி என் விருப்பம். அது சம்பவித்தே தீரும். அதற்காக நான் தவம் மேற்கொள்வேன், என்று சங்கல்பம் செய்து கொண்டவள் இமயச்சாரலை அடைந்து நெடிய தவத்தைத் தொடங்கினாள். எப்படி தெரியுமா? கால் கட்டை விரலை ஊன்றி, ஆக்ரோஷமும் பெரும் கோபமுமாய் அவள் செய்யத் தொடங்கிய தவம் 12 ஆண்டுகள் தொடர்ந்தது.

அது தேவாதி தேவர்களை எல்லாம் கலக்கியது. விண்ணில் இருந்த இந்திரன் அவளின் தவத்தைப் பார்த்து வியந்தான். தனக்கு இணையான வீரரான பீஷ்மரை அழிக்க எண்ணி அவள் தவம் செய்ததால், அவனால் வரம் தர முடியவில்லை. இறுதியில், அம்பையின் தவம் முருகப்பெருமானையே வரவழைத்து விட்டது. முருகப்பெருமானும் அம்பை கோரிய வரமான பீஷ்மரைக கொல்லும் நேரடியாகத் தந்து விடவில்லை. தேவலோகத்து தாமரைப் பூக்களால் ஆன ஒரு மாலையை அவளிடம் தந்த முருகன், இதை எவன் ஒருவன் சூகின்றானோ, அவனே பீஷ்மனுக்கு காலன், என்று கூறி மாலையைத் தந்து விட்டு மறைந்தார்.ஆனால், அந்த மாலைக்குரிய கழுத்து அகப்பட வேண்டுமே? அதிலும், பீஷ்மாச்சாரியாரை எதிரியாகக் கருதி அவரைக் கொல்லும் எண்ணம் கொண்ட ஒரு அரசனும் அப்போது இல்லை. மேலும், அம்பைக்காக அவரை யாரும் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அம்பை அந்த மாலையுடன் பல அரசர் பெருமக்களைச் சென்று பார்த்தாள். அதைச் சூடிக் கொள்பவருக்கு நான் அடிமை என்றும் சொல்லிப் பார்த்தாள். யாரும் உடன்படவில்லை. இறுதியாக, பாஞ்சால அரசன் துருபதனை நாடி வந்தாள். இவன் யார் தெரியுமா?மகாபாரதத்தில் பிரதான நாயகியான திரவுபதி எனப்படும் பாஞ்சாலியின் தந்தை. அவன் பாஞ்சால தேசத்திற்கு அரசன் ஆனதே ஒரு ஆச்சரியமூட்டும் செய்தி. அவனது பிறப்பும் மிக விநோதமானது. அதை அறிந்தால் தான் துருபதன் என்னும் பெயர் காரணத்தை நாம் அறிய முடியும்.

இவன் பிறப்பை மட்டுமல்ல. இவனது மகளான சிகண்டினி பற்றியும் தெரிந்து கொண்டால் தான் அம்பையின் வாழ்வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது நமக்கு தெரிய வரும். பாஞ்சால மன்னன் முதலில் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தான். அதற்காக காட்டுக்குச் சென்று தவத்தில் இறங்கினான். அரசர்கள் கடுந்தவம் புரிவது மிகவும் கடினம். அவர்களால் புலன்களை நெடுங்காலத்திற்கு அடக்கியாள முடியாது. துருபதனுக்கும் இதே போன்ற சோதனை இந்திர லோகத்து மேனகை வடிவில் ஏற்பட்டது. அந்த வனத்தில் இருந்த அபூர்வ ஜாதி பூக்களை பறித்துச் செல்ல அவள் வந்திருந்தாள். தவச்சிந்தனை கலைந்த துருபதன் அவளைப் பார்த்து விட்டான். அவள் மீது ஆசை கொண்டான். அந்த ஆசையின் விளைவாக அவனையும் அறியாமல் அவனது இந்திரியம் கீழே விழுந்தது. தன்னை மேனகை இழிவாக கருதி விடுவாளோ என்று எண்ணி அதனைக் காலால் மறைத்து விட்டான். இவை அனைத்தும் துரு என்னும் மரத்தின் கீழ் நிகழ்ந்தது. மேனகை சென்றதும், மன்னன் காலை விலக்கினான். அந்த இடத்தில் கர்ப்பத்தில் உருக்கொண்டது போல ஒரு குழந்தை. இதை கலியுகத்தோடு ஒப்பிடக்கூடாது. துவாபர யுகத்து தர்மத்திற்கேற்ப, இந்த சம்பவம் நிகழ்ந்தது. துரு மரத்தின் கீழ் கால் என்னும் பதம் பட்டு பிறந்த காரணத்தால், அந்த குழந்தை துருபதன் என்று பெயர் வந்தது. இந்த துருபதனைப் பார்க்கத் தான் அம்பை தேவலோகத்து மாலையுடன் வந்தாள். இதன்பிறகு, என்ன நடந்தது?

 
மேலும் தெரிந்த பாரதம்.. தெரியாத பாத்திரம்! »
temple news
ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் ஐந்தாவது வேதம் இது!வியாசர் என்னும் மாமுனிவரால் ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ... மேலும்
 
temple news
சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் ... மேலும்
 
temple news
பாரதத்தில் பீஷ்மர் பற்றிய அறிமுகம் அநேகமாகத் தேவை இருக்காது. ஆனால், அவரோடு தொடர்புடைய விசித்திர ... மேலும்
 
temple news
அம்பையின் நிலையைப் பார்த்து, துருபதனும் கலங்கித்தான் போனான். மன்னா! பீஷ்மர் செய்த தவறால் நான் பந்து போல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar