பதிவு செய்த நாள்
22
அக்
2015
10:10
மேட்டுப்பாளையம்: தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில், நவராத்திரி பிரமோற்சவத்தை அடுத்து, தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது. மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பு அருகே தென்திருமலை தென்திருப்பதி, ஸ்ரீவேங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. நவராத்திரி பிரமோற்சவம் விழா கடந்த, 13ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. சேஷ வாகனம், அன்னபஷி, சிம்மம், முத்துப்பந்தல், கல்ப விருட்சம், கருட சேவை, அனுமந்த, சூர்ய, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில், தினமும் சுவாமியின் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, பூ அலங்காரம் செய்த தேருக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாதஸ்வர இசை, மேள தாளம், எக்காளம், தாரை, தப்பட்டை முழங்க, நான்கு மாட வீதிகள் வழியாக தேர் நிலையை வந்தடைந்தது. திருவீதி உலாவில், மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.