*மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே! கற்பகம் போல் வாரி வழங்குபவளே! மலையத்துவஜன் மகளே! அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே! ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே! திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே! ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே! எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.
*புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே! சாம்பவியே! சங்கரியே! சியாமளையே! மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே! மதங்க முனிவரின் மகளாக வந்தவளே! பிரபஞ்சத்தைப் படைத்தவளே! வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே! எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.
*கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே! காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே! காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே! அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே! திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே! வெற்றி தேவதையே! உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.