முதன் முறையாக சென்னையில் ஐயப்பனுக்கு ஏகதின கோடி அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2015 02:10
சென்னை: உலகில் முதன் முறையாக வரும் டிச. 5ம் தேதி சென்னை, மீனம்பாக்கம் இரயில்வே நிலையம் அருகில் உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஐயப்பனுக்கு ஒரு நாள் கோடி அர்ச்சனை நடைபெற உள்ளது. பக்தர்கள் தங்களது கரங்களாலேயே ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.
நிகழ்ச்சி நிரல்:
4.12.2015 (வெள்ளி)- கணபதி ஹோமம், இதர அனைத்து ஹோமங்கள் மற்றும் வேத பாராயணம் 5.12.2015 (சனிக்கிழமை)- ஏகதின கோடி அர்ச்சனை (உத்திர நட்சத்திரம்) காலை 7 மணி முதல் இரவு 7.00 மணி வரை 6.12.2015 (ஞாயிறு)- பூர்ணாபிஷேகம், சாஸ்தா பீர்த்தி
ஸ்ரீஐயப்பன்-கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்: தென்னிந்தியாவில் நெடுங்காலமாகவே ஸ்ரீசாஸ்தா வழிபாடு நடைபெற்று வருகிறது. தன்னைச் சரணடைந்தவரை ஓடி வந்து காக்கும் ஸ்ரீதர்மசாஸ்தாவை-ஐயன், ஐயப்பன், ஐயனார் என பல்வேறு வடிவங்களில் நாம் வணங்குகிறோம். அவரது சாஸ்வத ரூபமே சபரிமலை ஸ்ரீஐயப்பன்.
ஸ்ரீஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை: ஐயனைவிட ஐயனின் நாமத்துக்கு மகத்துவம் அதிகம் என்பது பெரியோர் வாக்கு. அதனாலேயே அவன் நாமாவளியை பல்வேறு விதங்களில் நாம் போற்றி வழிபடுகிறோம். இந்த ஆண்டு ஒரு கோடி அர்ச்சனை நடத்திக் கொள்ள ஐயப்பன் சங்கல்பம் ஏற்பட்டுள்ளது நமது பாக்கியம். உலக நன்மைக்காக இந்த ஆண்டு ஐயனுக்கு உகந்த மண்டல காலத்தில் பல குருசாமிகளின் முன்னிலையில் ஆயிரகணக்கான ஐயப்ப பக்தர்களைக் கொண்டு காலையிலிருந்து மாலை வரையில் ஐயப்பனுக்கு ஒரே நாளில் ஒரு கோடி அர்ச்சனை செய்ய அவனருள் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தமிழக வரலாற்றில் முதன் முறையாக நடைபெறும் இம்மாபெரும் வைபவத்தில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளி சிந்தும் 1008 விளக்குகளில் மணிபூஷணனை அந்த ஜோதிஸ்வரூபனை அலங்கரித்து ஓம் சிவபுத்ராய நமஹ என்றதொரு நாமத்துடன் தொடங்கி அது பத்தாகி நூறாகி பல்லாயிரமாகி ஒரே நாளில் கோடி அர்ச்சனை சீரும் சிறப்புமாக நிறைவுற அத்தனை பக்தர்களினுடைய பொன்னடி பணிந்து விண்ணப்பம் செய்கிறோம்.
ஸ்ரீஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனையில் கலந்து கொள்வதினால் ஏற்படும் பலன்கள்: ஒரு முறை சரணம் என்றழைத்தாலே ஓடி வந்து அருள் செய்யும் ஐயப்பனை ஒரு கோடி முறை அர்ச்சனை செய்யும் போது அதில் ஆனந்தமடையும் ஐயன் கேட்டவர்க்கு கேட்ட வரம் தருவான். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் சுகானந்த வாழ்வும் பெறுவர் என்பது திண்ணம். இக்கோடி அர்ச்சனையில் வைதீக முறைப்படி வேத கோஷங்கள் ஐயப்பன் மூல மந்திர ஜபம் ஹோமங்கள் பூர்ணாபிஷேகம் என்ற சிறப்பான அபிஷேகம் நிறைவாக சாஸ்தா ப்ரீதி சிறப்பு வைபவமும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.