பதிவு செய்த நாள்
13
நவ
2015
12:11
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நவ.,17 ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் விரதத்தை துவங்கினர். முருகனின் ஆறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா மிக சிறப்பாக நடக்கும். உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வர். யாக சாலை பூஜை: நேற்று காலை கந்தசஷ்டி விழா துவங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.15 முதல் 5.45 மணிக்குள் ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்,12க்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு,
வீர வாள் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு தீபாரதனை நடந்தது. சூரசம்ஹாரம்: ஆறாம் திருவிழாவான நவ.,17 ல் ஜெயந்திநாதர் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து பெறுவார்கள்.ஏழாம் நாள் நவ.,18 ல் மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றுதல் நிழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.விரதம் துவக்கிய பக்தர்கள்: யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவக்கினர். விழா நாட்களில் கோயில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன், நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.