பதிவு செய்த நாள்
19
நவ
2015
12:11
கரூர்: கார்த்திகை மாதம் முன்னிட்டு, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்ல விரதம் துவங்கினர். கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அடுத்த, கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் சித்தரை விஷூ, மண்டல பூஜை, மகர சங்கரராந்தி ஆகிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, சபரிமலை செல்பவர்கள் ஏராளமானவர்கள் கார்த்திகை மாதம் ஏராமானவர்கள் மாலை அணிவித்து செல்ல வருவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் கார்த்திகை, 1ம்தேதியை முன்னிட்டு அதிகாலை, 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பனுக்கு நெய், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருச்சி, கரூர், குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், பழையஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே திரண்டு வந்து காவிரியில் புனித நீராடினர். பின், ஐயப்பனை வழிபட்டு விட்டு சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்தனர். பக்தர்களுக்கு மாலையை குருக்கள் தங்கமணி, செங்குட்டுவேல் ஆகியோர் அணிவித்தனர். மேலும், 40 நாள் மண்டல உற்சவ நிகழ்ச்சியில் தினமும் காலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம், 11.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின், மீண்டும் மாலை, 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு, 8.30 மணிக்கு அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மண்டல உற்சவ நிறைவு நாள் வரும் டிசம்பர், 27ம் தேதி வரை நடக்கிறது. ஜனவரி, (தை 1ம்தேதி) 14ம் தேதி மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.