பதிவு செய்த நாள்
28
நவ
2015
10:11
சபரிமலை :சபரிமலையில் நடப்பு மண்டல சீசன் தொடக்கத்தில் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதில் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பக்தர்களின் கார்கள் சேதம் அடைந்தது. அதன் பின்னர் கடந்த ஒரு வார காலமாக மழை இல்லை. நேற்று மாலை நான்கு மணிக்கு நடை திறந்த சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் பலமாக பெய்த மழை பின்னர் ஓய்ந்தது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
நவீன தகவல் தொடர்பு சேவை விரிவாக்கம்: சபரிமலை வரும் பக்தர்களின் சேவைக்காக போலீசின் நவீன தகவல் தொடர்பு சேவை பல்வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சபரிமலை, பம்பை, நிலக்கல், வடசேரிக்கரை, வண்டிப்பெரியாறு, உப்புப்பாறை, கணமலை, எருமேலி உள்ளிட்ட பக்தர்கள் செல்லும் பாதைகள் அனைத்தும் வாக்கி-டாக்கி கவரேஜூக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இடையூறுகள் இல்லாமல் எந்நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மோட்டார் வாகனத்துறையின் சார்பில், பக்தர்களின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் சரி செய்து கொடுக்கும் வகையில் ’சேப் சோன்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைப்பதற்காக போலீசின் வாக்கி டாக்கி வசதி இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பம்பை,- எருமேலி,- வண்டிப்பெரியாறை இணைத்து கவரேஜ் செய்யப்பட்டுள்ளது.போலீஸ் டெலி கம்யூனிகேஷன் தனி அதிகாரிகள் பாலச்சந்திரன், ஆனந்தன் ஆகியோர் பம்பையில் முகாமிட்டு இதற்கான பணிகளை கண்காணித்து வருகின்றனர். இதற்காக 120 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.