பதிவு செய்த நாள்
17
டிச
2015
10:12
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், 13 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா, மகா ருத்ர ஹோமம், 108 சங்காபிஷேகம் நடந்தது. சம்பக சஷ்டி விழா டிச., 10ல் அனுக்ஞையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை 10 மணிக்கு பைரவருக்கு அபிஷேகம் நடந்தது, மாலை 6.30 க்கு விபூதி காப்பு, பச்சை, சிகப்பு, வெள்ளை சாத்தி மற்றும் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பைரவர் அருள்பாலித்தார். நேற்று காலை 7 மணிக்கு மஹன்யாசமும், 9.30 மணி முதல் சென்னை மகாருத்ர ஜெப சமிதி சபாவினருடன், 121 சிவாச்சாரியார்கள் பங்கேற்ற மகா ருத்ர ஹோமமும், மூலவருக்கு ருத்ராபிஷேகமும் நடந்தது. பின்னர் பைரவருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 10 மணிக்கு பைரவருக்கு பாவாடை நைவேத்தியம், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படும். 12 மணிக்கு அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.