நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் சிவ விஷ்ணு பஜனை ஊர்வலம் நடந்தது. நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவில் வளாகத்தில் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலும் உள்ளது. இக்கோவிலில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவனையும், பெருமாளையும் தரிசிக்க முடியும் என்பது சிறப்பாகும். இக்கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி சிவவிஷ்ணு பஜனை ஊர்வலம் நடந்தது. சிவனும் பெருமாளும் தனித்தனியாக எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சர்தார்சிங் ராணா, ரமணி ஐயர், ரமேஷ், சந்திரசேகரன், தங்கராசு, கஜேந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியபடி சென்றனர்.