பதிவு செய்த நாள்
26
டிச
2015
12:12
ராமேஸ்வரம்: ராமநாத சுவாமி கோவிலில், பெயரளவில் திருப்பணிகள் நடப்பதாகவும், அறநிலையத் துறையின் அலட்சியத்தால், அதுவும் முறையாக நடைபெறவில்லை எனவும், பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி கூறியதாவது:ராமநாத சுவாமி கோவிலில், 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் முடிந்து, 2016 ஜனவரி, 20ல், கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; 8 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடைபெறுகின்றன; ஆனால், திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை. திருப்பணிகள் முடிவதற்குள், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் வேலை, அம்பாள் முன் மண்டப வேலை எதுவும் முழுமை பெறவில்லை.மேலும், உலக பிரசித்தி பெற்ற, மூன்றாம் பிரகார ஓவியங்கள் பொலிவிழந்து உள்ளன. அதோடு, அம்பாள் சிலையின் இடது கையில், சிறிய அளவில் தெறிப்புகள் இருக்கின்றன. பின்னமான சிலையை மாற்றாமல், கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என, சிற்பசாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.ராமேஸ்வரம் கோவிலில், முக்கிய முடிவுகளுக்கு சிருங்கேரி சுவாமிகள் ஒப்புதல் பெறுவது வழக்கம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்த, அவர் ஒப்புதல் வழங்கவில்லை. மாநிலம் முழுவதும் ஜனவரி, 20ல், ஒரே நாளில், பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த, அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -