மதுரை: தமிழக கோயில்களில் இன்று முதல் ஆடைக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில், கோயில்களில் வழிபட செல்பவர்கள் ஆன்மிக நெறிகளுக்கு உட்பட்டு ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரைக்கால் டவுசர், மினி ஸ்கர்ட், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டை ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்கள் பாரம்பரிய வேட்டி, பைஜாமா, துண்டு, பேண்ட், சட்டை, அணியலாம். அரைகுறை ஆடையுடன் வரும் பயணிகளை போலீசார் கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை வரும் ஜனவரி முதல் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.இதனை தொடர்ந்து இந்த உத்தரவு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.இது குறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டு பயணிகள் மட்டும் அரைகுறை ஆடையுடன் வருகின்றனர். அவர்களுக்கு இன்று முதல் கோயில் நிர்வாகம் சார்பில் பூஜை பொருட்கள் வழங்கும் இடத்தில் வேட்டி வழங்கப்படுகிறது. இந்த வேட்டிகளை அணிந்து வழிபாடு முடிந்த பின்னர், திரும்ப ஒப்படைக்க வேண்டும், என்றார்.