பதிவு செய்த நாள்
02
ஜன
2016
12:01
வத்திராயிருப்பு: ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் சதுரகிரி
மலைக்கு வந்த பக்தர்கள் ஜன.,1 மலைக்கு செல்ல அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
சதுரகிரி மலையில் கடந்தஆண்டு மே மாதம் நடந்த வெள்ளப்பெருக்கு, பக்தர்கள் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு மதுரை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்களால் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் தலா 4 நாட்கள் வீதம் பக்தர்கள் மலைக்கு சென்றுவந்தனர்.
இது தவிர தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையில் உள்ள கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களை வனத்துறை, காவல் துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். தாணிப்பாறை சிலநேரம் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டால் நிலைமையை சமாளிக்க முடியாமல் மதுரை கலெக்டருக்கு போன்மூலம் தகவல் தெரிவித்து, அவரிடம் சிறப்பு அனுமதி பெற்று பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிக்கின்றனர். இது வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று புத்தாண்டு தினத்தில் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் மலைக்கு வரத்துவங்கினர்.
சென்னை, கோவை, புதுச்சேரி, ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாகனங்களில் வந்து அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர். 4 மணி நேரம் காத்திருப்புவழக்கம்போல் ஜன.,1&ம் பக்தர்களை வனத்துறையினர், காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. நீண்ட துாரத்திலிருந்து வந்திருப்பதாலும், புத்தாண்டு பண்டிகை நாட்களில் ஒன்றானது என்பதால் அனுமதிக்க வேண்டும் என வாதிட்டபடி 4 மணி நேரமாக நுழைவாயில் கதவின் அருகே காத்திருந்தனர். அடிக்கடி இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமையை சமாளிக்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நீண்டநேரமாகியும் அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
பக்தர்கள் சென்ற பின் வந்த அனுமதி தகவல் ஜன.,1 அதிகாலை 6 மணிமுதல் 10 மணி வரை 4 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்து அதிகாரிகளிடம் கெஞ்சியபோதும் மலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடனும் மனவேதனையுடனும் திரும்பி சென்ற பிறகு, 10.45 மணிக்கு மதுரை கலெக்டரிடமிருந்து அனுமதி கிடைத்து விட்டதாக கூறி, வனத்துறையினர் நுழைவாயில் கதவை திறந்தனர். பக்தர்கள் மலைக்கு செல்லலாம் என கூறினர். ஆனால் அப்போது அடிவாரத்தில் பக்தர்கள் யாரும் இல்லை. அதிகாரிகளின் காலம் கடந்த முயற்சி , கலெக்டரின் தாமதமான அனுமதி யாருக்கும் பயனின்றி போனது.