திருநள்ளார் சனி பகவான் கோவில் யானை முகாமிற்கு புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2016 12:01
காரைக்கால்: திருநள்ளார் சனி பகவான் கோவில் ப்ரக்குருதி யானை நேற்று மேட்டுபாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமிற்கு புறப்பட்டது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் யானை செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலை சிமோகாவில் உள்ள சக்ரபால் யானைகள் முகாமில் இருந்து ப்ரக்குருதி யானை கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டது. தற்போது 12 வயதை நெருங்கும், இந்த இளம் பெண் யானைக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில் திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானையும் பங்கு பெற புதுச்சேரி அரசு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு தமிழக அரசு சம்மதம் தெரிவித்தது. இதையெடுத்து திருநள்ளார் ப்ரக்குருதி யானை கோயம்பத்துõர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் முகாமிற்கு நேற்று புறப்பட்டது. யானையுடன் 2 பாகங்களும் சென்றனர். முகாமிற்கு யானையை வழியனுப்பும் நிகழ்ச்சி கோவிலில் சிறப்பாக நடந்தது. கலெக்டர் வல்லவன்,கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சார்யர் ராஜாசுவாமிநாதர்,சுரேஷ், கார்த்திக் ஆகியோர் யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாரதனை காண்பித்தார். பின் யானைக்கு பிரசாதம், பழங்கள் வழங்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு முகாமிற்கு புறப்பட்டது.