இன்னும் 15 நாளில்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2016 03:01
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவிலகல் மகாகும்பாபிஷேகம் ஜன. 20ல் நடப்பதை ஒட்டி இந்த சிறப்பு பகுதி வெளியாகிறது. ராமேஸ்வரம் சென்றால் ராமநாதரை மனம் ஒன்றி பிரார்த்திக்க வேண்டும். அந்த வேண்டுதலை உடனடியாக அவர் அங்கீகரிப்பார். காரணம் என்ன வென்றால், மனதாலும், வாக்காலும் ஒன்றுபட்ட ராமனால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் அது. ஒருவர் நன்றாக பணி செய்தார் என்பதற்காக, தொழிற்சாலை உரிமையாளர் ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி திருப்தியா? என்று கேட்டார். தொழிலாளியும் திருப்தி என்றார். ஆனால், மனதிற்குள் இரண்டாயிரமாக தந்திருக்கலாமே என்று நினைத்துக் கொண்டார். அதாவது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது உலக வழக்கம்.
ராமனைப் பொறுத்தவரை அப்படியில்லை. கைகேயி அவரை காட்டுக்குப் போகச் சொல்லி தந்தை உத்தரவிட்டிருப்பதாகச் சொன்னாள். உடனே புறப்படுகிறேன் தாயே! என்றார். வாயால் மட்டுமல்ல, மனதாரச் சொன்னார். அதனால் தான் அவர் கானகத்தில் பல துன்பங்களை அனுபவித்தாலும் இறுதியில் வெற்றி பெற்றார். ராமன் காட்டுக்குப் போனது கூட பிறர் நன்மை கருதியே. திருமாலின் அவதாரமான அவர் அந்தச் சூழலை தானாகவே உருவாக்கிக் கொண்டார். ராமாவதாரத்தின் நோக்கமே முனிவர்களை தரிசிப்பது தான். முனிவர்கள், திருமாலை நினைத்து தவமிருந்து அவரை பார்க்கும் பாக்கியத்தைப் பெறுவது என்பது மிகவும் சிரமம். அதற்கு அதிக காலம் பிடிக்கும். எனவே கருணைக் கடலான திருமால், ராமனாய் உருமாறி காட்டுக்கு சென்று தன் பக்தர்களானமுனிவர்களுக்கு காட்சியளித்தார். அவர்களை மட்டுமல்ல, தன் பக்தர்களான சபரி, குகன் ஆகியோருக்கும் காட்சி தந்திருக்கிறார். மனதாலும், வாக்காலும் ஒன்றுபட்டவரும், ராம என்று சொன்னால் பக்தர்களை தேடி வருபவருமான ராமபிரான் ஸ்தாபித்த ராமநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை தரிசித்தால் நம் மனம் கட்டுப்பட்டு விட்டால், நேர்மை வழி கண்களில் தென்படும். அந்த வழியில் நடந்தால் நம்மால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை என்றாகி விடும்.