சபரிமலையில் இன்று எருமேலி பேட்டை துள்ளல் நாளை திருவாபரணம் புறப்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2016 11:01
சபரிமலை,: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடக்கிறது. நாளை மதியம் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது. மகரஜோதி விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. சபரிமலையில் மகரஜோதி விழா நிறைவு கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் நிற்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். புல்மேட்டில் 1,500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகின்றனர். இங்கு போதுமான வெளிச்சம் கிடைக்க அவசர கால விளக்குகள் அமைக்கப்படுகின்றன. பாண்டித்தாவளம், பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட இடங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. பக்தர்கள் டிரான்ஸ்பார்மர்களில் ஏறி நின்று ஜோதி பார்ப்பதை தடுக்க எல்லா டிரான்ஸ்பார்மர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.13-ம் தேதி கூடுதல் போலீசார் சன்னிதானம் வர இருக்கின்றனர்.
பேட்டை துள்ளல்: மண்டல காலம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக பேட்டைதுள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு முன்னோடியாக இன்று நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு குழுவினரின் பேட்டை துள்ளல் சிறப்பு பெற்றது. இந்த பேட்டை துள்ளலுக்கு பின்னர் இங்கு பேட்டைதுள்ளல் நடைபெறாது. இன்று பகல் 12.30 மணி அளவில் அம்பலாப்புழா பக்தர்களும், மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளல் நடத்துவர். பின்னர் இவர்கள் பெருவழிப்பாதை வழியாக பம்பை வந்து சன்னிதானம் வருவர்.
திருவாபரணம்: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நாளை மதியம் பந்தளத்திலிருந்து புறப்படுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக இந்த ஆண்டு பந்தளத்தில் திருவாபரண தரிசனம் கிடையாது. தனியாக அமைக்கப்படும் பந்தலில் வைக்கப்படும் திருவாபரண பெட்டி, மதியம் பூஜைக்கு பின்னர் தலைசுமையாக புறப்படும். இந்த பவனி 15-ம் தேதி மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் அணிவித்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்ற சில நிமிட நேரங்களில் பொன்னம்பலமேட்டில் ஜோதி காட்சி தரும்.