பதிவு செய்த நாள்
12
ஜன
2016
11:01
பெ.நா.பாளையம்: தைப்பூச திருவிழாவையொட்டி, துடியலுார் அருகே வெள்ளக்கிணறுவில் காவடி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தைப்பூச திருவிழாவையொட்டி, முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், காவடி கொண்டாட்டம் நடக் கும். கோவை நகரைச் சுற்றியுள்ள மருதமலை, குருந்தமலை, குமரன் குன்று, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட முருகன் ஆலயங்களுக்கு பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காவடி எடுத்துச் செல்வது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, ஆறுமுக காவடி, ‘செலுத்து காவடிகள்’ உள்ளிட்ட பல வகை காவடிகளை செய்யும் பணி துடியலுார் அருகே வெள்ளக்கிணறுவில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி நுாற்றுக்கணக்கான காவடிகள் செய்யும் பணி விடிய, விடிய நடந்து வருகிறது. காவடி செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் சாமியப்பன் கூறியதாவது: கடந்த, 37 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். ‘செலுத்து காவடி’ எனப்படும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள், இக்காவடியை விரதமிருந்து எடுத்துச் செல்வது வழக்கம். செலுத்து காவடி செய்ய மாம்பலகை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில், செய்தால் காவடி உடையாது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தைப்பூச சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவடிகள் செய்வோம். ஆனால், இப்போது, 300 காவடிகளுக்கான ‘ஆர்டர்கள்’ மட்டுமே கிடைக்கிறது. காவடியை கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், ‘ஆர்டர்’ கொடுத்து, பெற்று செல்கின்றனர். காவடி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருவதோடு, அவை உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. குறிப்பாக, மூங்கில் மற்றும் மூங்கில் தப்பைகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோவை, சூலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, சேகரித்து வர வேண்டிய நிலை உள்ளது. காவடிகள் அதன் அளவைப் பொறுத்து, 300 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். இவ்வாறு, சாமியப்பன் கூறினார்.