சாணார்பட்டி: நத்தம், சாணார்பட்டி வழியாக செல்லும் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு பல அமைப்புகள் சார்பில் இலவச மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று சாணார்பட்டியில் கடலுõர் மாவட்டம் ஊத்தங்கால் பகுதியை சேர்ந்த போகர் சித்த வைத்திய சாலை சார்பில் மூலிகை எண்ணெய் கொண்டு பாதங்களில் தடவி பக்தர்களுக்கு இலவச மசாஜ் செய்தனர். ஊத்தாங்காலை சேர்ந்த இளங்கோவன் இந்த வைத்திய சாலையை நடத்தி வருகிறார். கடந்த 35 ஆண்டுகளாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் இவர் ஆரம்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று இந்த சேவையை வழங்கினார். கடந்த 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒரு குழுவை அழைத்துக்கொண்டு சேவை செய்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சொக்கலிங்கபுரம், சாணார்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு நாள் தங்கி சேவை செய்கின்றனர். இது குறித்து இளங்கோவன் கூறியதாவது: காட்டுச்சோம்பு, ஓமம், கற்பூரம், நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு மூலிகை எண்ணெய் தயார் செய்கிறோம். குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். கால் வலியுடன் செல்லும் பக்தர்களுக்கு வலி நிவாரண சேவை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே ஏற்பட்டது. இதன் மூலம் ஒருவித திருப்தி கிடைக்கிறது என்றார். இதே போல் திண்டுக்ல் மாவட்ட பூஜாரிகள் சங்கம் சார்பில் நிலவேம்பு கஷாயம், சீரக குடிநீர், நீர்மோர் வழங்கும் முகாம் நடந்தது. மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் துவக்கி வைத்தார். கிழக்கு மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.