25 ஆண்டுகளுக்கு பின்.. திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2016 12:01
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு பின் பிப்., 8ம் தேதி அதிகாலையில் மகோதைய புண்ணியகால தீர்த்தவாரி நடக்கிறது. தை அமாவாசை அன்று அதிகாலை வியதிபாதயோகம், திருவோண நட்சத்திரம், ஞாயிறு என்றால் அர்த்தோதய புண்ணிய காலம், திங்கள் என்றால் மகோதய புண்ணிய காலம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய புண்ணிய காலங்களில் கடல் மற்றும் புண்ணிய நதிகளில் புனித நீராடுவதன் மூலம் பித்ரு தோஷம், பாவம், சாபம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். புண்ணியகாலம் 12 அல்லது 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். கடந்த 1990ல் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடந்தது. 25 ஆண்டுகளுக்கு பின் பிப்., 8ம் தேதி மகோதய புண்ணியகால தீர்த்தவாரி நடக்கிறது. இதையொட்டி திருப் புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோயில் பேஷ்கார் கண்ணன் கூறுகையில்,"" 25 ஆண்டுகளுக்கு பின் மகோதய புண்ணியகால தீர்த்தவாரி பிப்.,8(திங்கள்) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 6 மணிக்கு ஆதி ஜெகநாத பெருமாள் கருட வாகனத்தில் சேதுக்கரை கடற்கரைக்கு எழுந் தருள்கிறார். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. இதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன், அகோபில மடம் ஜீயர் அழகிய சிங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ் தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர், என்றார்.