பதிவு செய்த நாள்
23
ஜன
2016
12:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா தேரோட்டம் நாளை (24ம் தேதி) நடக்கிறது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழ் பெற்ற முருகன் திருதலம் சென்னிமலை. இங்கு நடப்பாண்டு தைப்பூச விழா, கடந்த, 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அன்று முதல் தினமும் முருகப்பெருமான் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, காமதேனு, கையல்ங்கிரி, யானை என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இன்று மாலை, 6 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (24ம் தேதி) அதிகாலை, 3 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், அதை தொடர்ந்து காலை, 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை சுற்று சுழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் உள்ளிட்ட பலர் தொடங்கி வைக்கின்றனர். திங்கள்கிழமை மாலை தேர் நிலை சேருகிறது. வரும், 26ம் தேதி பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், 27ம் தேதி தெப்போற்சவம் பூத வாகன காட்சியும் நடக்ககிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம், 28ம் தேதி இரவு நடக்கிறது.