பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
திருத்தணி: திருத்தணி மலைக் கோவிலில் நேற்று, தைப்பூச திருவிழாவை ஒட்டி, ஒன்றரை லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள், பொது வழியில், 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணி மற்றும் மாலை, 4:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பின், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. இரவு, 7:00 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு, 7:30 மணிக்கு தங்கரதத்திலும் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று, தைப்பூசம், அரசு விடுமுறை என்பதால், 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொதுவழியில் சென்ற பக்தர்கள், 10 மணி நேரமும்; 25, 50 மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனத்தில், குறைந்த பட்சம் மூன்று மணி நேரமும் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். நிர்வாகத்தின் மீது அதிருப்தி!நீண்ட நேரம் நிற்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை, சிறப்பு நுழைவாயிலில், கோவில் நிர்வாகம் அனுமதிக்காமல், 100 ரூபாய் சிறப்பு தரிசன வழியில் அனுப்பினர். அங்கு, மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். ஆனால், ஆளும் கட்சியினர், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் வசதி படைத்தவர்களை, சிறப்பு நுழைவு வாயிலில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், அரை மணி நேரத்தில் மூலவரை தரிசித்து திரும்பினர். இதனால் பக்தர்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்தனர்.