ப.வேலூர்: ப.வேலூர் காவிரியாற்றில், தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. மறைந்த முன்னோர்களுக்கு புண்ணிய நதிகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அதன்படி ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததாக பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. தை அமாவாசையான நேற்று, ப.வேலூர் காவிரியாற்றில் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், காவிரியில் குளித்துவிட்டு, அருகே இருக்கும் சிவன் கோவில்களில் வழிபட்டனர்.