பதிவு செய்த நாள்
22
பிப்
2016
12:02
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான இரு திருக்கல்யாணங்கள் கோலாகலமாக நடந்தன.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமணங்களை தரிசித்தனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாசி பிரம்மோற்சவம், கடந்த, 12ம் தேதி துவங்கியது. வரும், 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான, கல்யாணசுந்தரர் - பார்வதி தேவி திருமணம், நேற்று காலை, 9:30ல் இருந்து 11:00 மணிக்குள் நடைபெற்றது. அதையடுத்து, பெண்கள் தாங்கள் கொண்டு வந்த புது தாலிக் கயிற்றை எடுத்து மாற்றிக் கொண்டனர். பக்தர்கள், இனிப்புகளை வழங்கினர். மாலையில், 63 நாயன்மார் அபிஷேகம், ரிஷபாரூடர் மாடவீதி உற்சவம் நடந்தது. இரவு, சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் திருமணம் நடந்தது. பின், திருமணக் கோலத்தில் தரிசனம் தரும் மகிழடி சேவையும், நடராஜர் அபிஷேகமும், அதிகாலை தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.
குடிநீருக்கு பரிதவிப்பு: திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள், குடிநீர் இன்றி பரிதவித்தனர். கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில், கூட்டத்தை பயன்படுத்தி குடிநீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
கோவில் தெப்பக்குளம் அருகே, ஐந்து கழிப்பறைகள் கொண்ட பொது கழிப்பறை இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது போதுமானதாக இல்லை. மொபைல் டாய்லெட் வசதி செய்யப்படவில்லை.
பாதுகாப்பு இடம் இல்லாததால், பக்தர்களின் காலணிகள் திருடு போயின.