பதிவு செய்த நாள்
22
பிப்
2016
02:02
திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவருக்கு, நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீஹயக்கிரீவர், எம்பெருமானின் ஒரு வடிவம். "ஹயம் என்றால் குதிரை; குதிரை முகம் கொண்டவர். மது, கைபவர் என்ற இரு அரக்கர்கள், நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் மறைத்து விட்டனர். குதிரை முகவடிவம் எடுத்து, கடலுக்குள் சென்று, எம்பெருமான் வேதங்களை மீட்டதாக புராணத்தில் உள்ளது. ஆயக்கலைகள் அனைத்துக்கும் அதிபதியாகவும் குறிப்பிடப்படும் ஹயக்கிரீவர், திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவராக, தனி சன்னதில் எழுந்தருளியுள்ளார். திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், ஸ்ரீஹயக்கிரீவர் சன்னதியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, ஐந்து வாரங்களுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நேற்று,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பூஜை நடந்தது. சிறப்பு யாகம் மற்றும் சுவாமிக்கு, தேன், பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நாம சங்கீர்த்தனம், மகா தீபாராதனை நடந்தது. பொதுத்தேர்வை நினைவாற்றலும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, சிறப்பாக தேர்ச்சி பெறவேண்டும் என்ற பிரார்த்தனையோடு நடத்தப்பட்ட யாகத்தில், 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு, சுவாமி பிரசாதம் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்டவை கொண்ட, பாக்ஸ் வழங்கப்பட்டது. வரும், 28ல், 12ம் வகுப்பு மாணவர்களுக்கும்; மார்ச் 6, 13 மற்றும், 17ல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், காலை, 9:00மணி முதல், 12:00 வரை, சிறப்புயாகம், பூஜை நடைபெறும்.