பதிவு செய்த நாள்
23
பிப்
2016
11:02
மேட்டுப்பாளையம்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாசர்களின் சங்கு, சேகண்டி ஒலியுடன், ‘ரங்கா பராக், கோவிந்தா பராக்’ என்ற கோஷங்களுக்கு இடையேயும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தின் நடுவேயும், காரமடை அரங்கநாதர் கோவில் தேர், ஆடி அசைந்து சென்றது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பிப்.,22 அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், அலங்காரம் செய்திருந்த திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, தேரின் எழுந்தருளிய சுவாமியை வழிபட்டனர். மாலை, 5:30 மணிக்கு தேர் முன்பு சிறப்பு பூஜைகள் செய்தனர். ஆறு சக்கரங்களுக்கும் பூசணிக்காய் வைத்து பூஜை செய்து, தேங்காய் உடைக்கப்பட்டது. பின், மாலை, 6:00 மணிக்கு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டம் துவங்கியதும், அங்கிருந்த ஆயிரக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்தனர். பக்தர்களின், ‘ரங்கா பராக், கோவிந்தா பராக்’ என்ற கோஷம், விண்ணை அதிரச் செய்தது. இரும்பு சக்கரங்கள் என்பதால், பக்தர்கள் மிகவும் எளிதாக தேரை இழுத்துச் சென்றனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தின் நடுவே, தேர் ஆடி அசைந்து சென்றது.
தேர் செல்லும் போது, பக்தர்கள் வாழைப்பழங்களை தேர் மீது வீசி, நேர்த்திக் கடனை செலுத்தினர். தேரின் முன்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட ‘ஜமாப்’ குழுவினர் மேளம் அடித்துச் சென்றனர். காரமடை நகரில் பல்வேறு அமைப்பினர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு நீர்மோரும், தண்ணீரும் வழங்கினர். பேரூராட்சி நிர்வாகம் தேவையான குடிநீர் வசதியை செய்தது. அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கின. 200க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு நிலையை அடைந்தது.