பதிவு செய்த நாள்
23
பிப்
2016
02:02
குன்னுார்: குன்னுார் அருகே உலிக்கல் பண்ணமனை கிராமம் அருகே, ரங்கநாதர் திருவிழா
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குன்னுார் அருகே, உலிக்கல் பஞ்சாயத்து, பண்ணமனை கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில்,
250ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு நேற்று ரங்கநாதர் திருவிழா நேற்று நடந்தது. இங்கு முன்னதாக, பம்பலகோம்பை குறும்பர் இன ஆதிவாசி மக்களின், பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்த பின்பு, கோவில் திறக்கப்பட்டது. இதன் பிறகு, படுக இன மக்கள் சார்பில் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து தீபக்கல்லில் பாரம்பரிய முறையப்படி தீபம் ஏற்றப்பட்டது. பின்பு, கவளம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்தது, பூஜைகளை விரதம் மேற்கொண்ட பூசாரி சுரேஷ்குமார் நடத்தினார்.
இதில், உலிக்கல், பண்ணமனை, தேனலை, கருக்கம்படை, ஆர்செடின் உட்பட சுற்றுப்புற
கிராமங்களை சேர்ந்த ஏராளமான படுக இன மக்கள், ஆதிவாசி மக்கள் பங்கேற்றனர்.
தேனலை கிராம தலைவர் அண்ணாதுரை, பண்ணமனை ஊர் பிரமுகர் ராஜாராம் ஆகியோர்
கூறுகையில்,நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், குறும்பர் ஆதிவாசிகளுடன்
இணைந்து விழா நடத்தப்படுகிறது. இங்கு விழா நடந்த பிறகு, காரமடை ரங்கநாதர் கோவில்
தேரோட்டம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது என்றார்.