பதிவு செய்த நாள்
10
மார்
2026
11:03
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன், முருகபெருமான் அருள்பாலிக்கிறார். வல்லாசுரன் மாண்டு விழுந்த இடத்தில் ஆண்டுதோறும் தோட்ட உத்சவம் நடத்தப்படும். அதன்படி, 2013ம் ஆண்டு கடைசியாக தோட்ட உத்சவம் நடந்தது. இதையடுத்து, 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது. தோட்ட உத்சவத்தையொட்டி, நேற்று காலை 4:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் கோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 12:00 மணிக்கு கோடை ஆண்டவர் சப்பரத்தில் எழுந்தருளி வல்லாசுரன் விழுந்த தோட்டத்திற்கு வந்தடைந்தார். மாலை 4:00 மணிக்கு கோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின், கோடையாண்டவர் அங்கிருந்து புறப்பட்டு வல்லக்கோட்டை கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.