பதிவு செய்த நாள்
05
மார்
2016
11:03
திருப்பூர்: விஸ்வேஸ்வரர் கோவிலில், தெற்கு பார்த்த நிலையில் கனக சபை அமைந்துள்ளது.
உற்சவ மூர்த்தியாக, ஆனந்த நடன ரூபத்தில், சிவகாமி அம்மையுடன் ஈசன் எழுந்தருளியுள்ளார்.
அணுக்கள் இயங்க, அண்டங்களும் இயங்குகின்றன; அண்டங்கள் இயங்க, ஆண்டவனும் நடன மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கனகசபை எனப்படும் உற்சவ மூர்த்திகள் சன்னதி, இத்தலத்தில் சிறப்புற அமைந்துள்ளது. அழகிய கண்ணாடியால் அமையப்பெற்ற திருப்பள்ளியறையை ஒட்டி, கனகசபை, தெற்கு பார்த்தவாறு, முன்மண்டபத்தில்
அமைந்திருப்பது, விஸ்வேஸ்வரர் கோவிலுக்கே உள்ள தனிச்சிறப்பு.சிவனின் ஐந்து ரூபங்கள் என்னவென்று தெரியுமா? நடராஜர், சோமாஸ்கந்தர் ரூபம், சந்திரசேகர், பிட்சாடனர், உமா மகேஸ்வரர் ஆகியவையே. இதில், ஆருத்ரா தரிசனம், சிவகாமியம்மன் உடனமர் நடராஜர் உற்சவம் மிக விசேஷமானது. அடுத்ததாக, அம்பாள் தோள் மீது சுவாமி கரம் வைத்தபடி, தம்பதியராக காணப்படும் காட்சி; பிரதோஷ காலத்தில், வெள்ளியால் ஆன நந்தி
வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வருகிறார்.
பிட்சாடனர் வடிவம் தனிச்சிறப்பு பெற்றது. பிச்சாடனருக்கு, பலித்தேர்பிரான், ஐயங்கொள்பெம்மான் என, இந்த ரூபத்துக்கு மற்ற பெயர்களும் உள்ளன. சிவபெருமானின் இக்கோலம், தாருகா வனத்தில் வசித்த முனிவர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, சிவபெருமான் எடுத்த கோலமாகும்.ஆணவம், அகங்காரத்தை ஒழித்தால், மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்தவே, இக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவின் போது, பிச்சாடனர் ரூபத்தில் <உலா வந்து,
பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலையே, திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி, மகிழ்ச்சியை உணர்த்துகிறார்.
மறுநாள், திருத்தேரில் எழுந்தருளி, ஆணவத்தை விட்டொழித்த பக்தர்களுக்கு, அற்புதமாக காட்சி தருகிறார். இந்த ரூபத்தில், ஆணவம் என்ற இருள் அகன்று, ஞானம் என்ற ஜோதியை உணரலாம்; வாழ்வில் ஒளி பிறக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறார். இதே வடிவத்தில், உற்சவ மூர்த்தியாக இங்கு எழுந்தருள்வது, விஸ்வேஸ்வரர் கோவிலின் சிறப்பு. உற்சவ மூர்த்தி மட்டுமன்றி, இங்குள்ள பழமையான தூண்களில் இடம் பெற்றுள்ள சிற்பங்களிலும், பிட்சாடனர் வடிவம் அதிகளவு காணப்படுகிறது. மேலும், சந்திரசேகர் ரூபம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்மந்தர் என, நால்வருக்கும் உற்சவர் சிலைகள் உள்ளன.
இக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள் அனைத்தும், ஐம்பொன்னால் செய்யப்பட்ட, அழகிய
வேலைப்பாடுகள் கொண்ட, பழமையான சிலைகளாகும். திருவிழா காலங்களில், உற்சவ
மூர்த்திகளின் வீதி உலா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரகாரத்தில் கணபதி, சூரியன்,
சந்திரன், தட்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி, கஜலட்சுமி ஆகியோர் சிலைகளும் உள்ளன. கால பைரவர், தனி சன்னதியில் எழுந்தருளி வருகிறார். மூலவர், உற்சவர், கனகசபை, திருப்பள்ளியறை, பரிவார சன்னதிகள் ஒருங்கே, ஒரே சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ளன.