பதிவு செய்த நாள்
09
மார்
2016
12:03
உளுந்துார்பேட்டை: பாதுார், அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில், மாசி மாத அமாவாசையையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது. காலை 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் நடந்தது. யாக குண்டத்தில் பழவகைகள், நெய் ஊற்றப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள், மோகன குருக்கள் தலைமையில் வேத மந்திரங்களை முழங்க, யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்ப்பிக்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். பின், யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பழ வகைகள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் சேர்க்கப்பட்டு, தீபாராதனை வழிபாடு நடந்தது.ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.