மருந்து சாத்தி இறையுருவத்தை நிலைநிறுத்தி கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் 48 நாட்கள் பூஜை தொடரும். இறைவன் சாந்நித்யம் நிலைத்திருக்க, கும்பாபிஷேகத்தின் அங்கமாகவே அது செயல்படுகிறது. தவிர, நித்திய பூஜைகளில் பயன்படுத்தப்படும் அபிஷேகப் பொருட்களின் தாக்கத்தால் மருந்து கலையாமல் நிலைத்திருக்க, குறிப்பிட்ட அபிஷேகப் பொருள்களோடு மருந்தை ஸ்திரப்படுத்தவும் பயன்படுகிறது. 48 நாட்களில் அதன் ஸ்திரத்தன்மைக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிடும். பிணியில் இருந்து விடுபடுவதற்கு கடும் பத்தியத்துடன் சிகிச்சை நடைபெறும், அதன்பிறகு மறு பத்தியம் என்ற பெயரில் மருந்தில்லாமல் பத்தியம் தொடரும். இது, சிகிச்சை முடிந்த பிறகு 40 நாட்கள் தொடரும், வேலையில் அமர்ந்தவன், பணியில் இணைந்த அன்றே நிரந்தரமாவதில்லை. ஒரு வருஷம் வேலையில் இருந்த பிறகே நிரந்தரமாகிறான். அதுபோலத்தான் இதுவும். கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 12-வது வருஷத்தில் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். அதுவரைக்கும், சாத்திய மருந்து உருக்குலையாமல் இருக்க, வரையறையுடன் நிகழ்த்தப்படும் மண்டலாபிஷேகம் பாதுகாப்பாகவும் இருக்கும்.