மும்மூர்த்திகளது வடிவமாகக் கருதப்படும் அரச மரத்தை காலை வேளையில் வலம் வந்தால் சகல நலன்களும் பெறலாம். கீதையில் கண்ணன், மரங்களில் நான் அரச மரம்! என்கிறான். அதனால் அரச மரம் சர்வ தேவதா ஸ்வரூபம். இது திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நிலையம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்சமாக விளங்குகிறது. அரச மரத்துக்கு வடமொழியில் அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறு நாளுக்குள் அழிந்து விடும். அரச மர நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். அரச மரத்தடியில்தான் சித்தார்த்தர், புத்தர் ஆனார். மரமும் போதி மரம் ஆயிற்று. அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை - திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமம்! திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று அமாசோமவார விரதம் என்பர். அன்று அரச மர பிரதட்சிணம் செய்வது மிகவும் புண்ணியம் தரும். வைகாசி மாதம் அரச மரத்தடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்வது சிறப்பு. தென்காசி அடுத்த ஆயக்குடி ஸ்ரீபாலசுப்ரமணியக் கோயிலில் அரச இலைகளில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. அரச இலைகளின் சத்து காற்றில் பரவி, யோகிகளின் மன ஒருமைப்பாட்டுக்கு துணை செய்யும்.