வடபழநி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திரம் லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா 29ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2026 10:03
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி துவங்குகிறது.
தொண்டை வளநாட்டில் தர்மமிகு சென்னை வடபழநியில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளிக்கும் கலியுக வரதனாகவும் கண்கண்ட தெய்வமாகவும் எழுந்தருளிக் கருணை மழை பொழியும் வள்ளலாகக் காட்சி தருபவர் அருள்மிகு வடபழநி ஆண்டவர். இக்கோயிலில் நிகழும் மங்கலகரமான விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 15ஆம் நாள் (29-03-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 21ஆம் நாள் (04-04-2026) சனிக்கிழமை வரை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இலட்சார்ச்சனை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
பங்குனி மாதம் 15ஆம் நாள் (29-03-2026) ஞாயிற்றுக்கிழமை காலையில் இலட்சார்ச்சனையும் அன்று மாலையில் யாகசாலை பூஜைகளும் தொடங்கப்பட்டு பங்குனி மாதம் 17ஆம் நாள் (31-03-2026) செவ்வாய்கிழமை மாலையுடன் இலட்சார்ச்சனை பூர்த்தியாகி, பங்குனி மாதம் 18ஆம் நாள் (01-04-2026) புதன்கிழமை பங்குனி உத்திரத்தன்று உச்சிக் காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டுக் கலசாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தியாகின்றன. பங்குனி மாதம் 18ஆம் நாள் (01-04-2026) புதன்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இரவு 7.00 மணிக்குச் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் பங்குனி மாதம் 19ஆம் நாள் (02-04-2026) வியாழக்கிழமை முதல் பங்குனி மாதம் 21ஆம் நாள் (04-04-2026) சனிக்கிழமை வரை இரவு 7.00 மணிக்குத் திருக்குளத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. இலட்சார்ச்சனையில் கலந்து கொண்டு வேண்டும் வரம் அளிக்கும் வடபழநி ஆண்டவரின் பேரருளைப் பெறுவோம்.