பழநியில் பங்குனி உத்திர திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2016 11:03
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி மார்ச் 26 வரை 10 நாட்கள் நடக்கிறது. கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற பங்குனி உத்தர திருவிழாவிற்காக பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து இன்று (மார்ச் 16) இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருஆவினன்குடிகோயிலுக்கு எழுந்தருள்வர். அங்கு நாளை காலை 10மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கொடியேற்றமும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 22ல் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் முத்துக்குமாரசுவாமி, வள்ளி திருக்கல்யாணமும், அன்று இரவு 9.00 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் சுவாமி உலாவும் நடக்கிறது. விழாவின் ஏழாம் நாள் (மார்ச் 23ல்) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 4.00 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு வடக்கு கிரிவீதி தேர்நிலையில் இருந்து தேர் வடம் பிடித்தல் துவங்கி நான்குகிரிவீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழாவையொட்டி வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.