பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 12ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 19ல் திருவிழா கம்பம் போடப்பட்டது. திருவிழா கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் மஞ்சள் நீர், தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம், 1:00 மணிக்கு, கோவில் செயல்அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலையில், தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கம்பத்தில், மஞ்சள் துணியில், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சி அளிப்பது போன்ற உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. திருத்தேருக்கு முகூர்த்தங்கால் பூஜை செய்யப்பட்டு, தேர் பராமரிப்பு பணி துவக்கப்பட்டது. பிற்பகல், 3:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் துவங்கியது. பூவோடு துவக்க விழாவில், பக்தர்கள் பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபட்டனர். நேற்று முதல் அம்மன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. முதல் நாளான நேற்று, காமதேனு வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். கோவில் கலையரங்கில் இன்று மாலை, 6:00 மணிக்கு, ஆன்மிக பேரவை சார்பில், இன்னிசை நிகழ்ச்சியும், குட்டைத்திடலில் இன்று இரவு, 10:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.