விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி இன்று முதல் மூன்று நாட்கள் பாதுகாப்பு பணிக்காக, 482 போலீசார் ஈடுப்படுகின்றனர். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் விழா கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று நடக்கிறது. நாளை( ஏப்.4) பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.5ல் வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் தேர் நிலை வந்து சேருதலும், மறுநாள் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது.
நேர்த்திக்கடன்: இன்று முதல் மூன்று நாட்களும் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்றது. தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு பெற்றவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருவர். அதிலும் பெண்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இரவு முழுவதும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும். இதைதொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக போலீஸ் போடப்பட்டுள்ளது.
14 இன்ஸ்பெக்டர்கள்: உதவி கண்காணிப்பாளர் கீழ் 120 போலீசார், கூடுதல் கண்காணிப்பாளர் கீழ் 362 போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு பாதுகாப்பு அணியில் ஒரு உதவி காவல் கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பாளர்கள், 14 இன்ஸ்பெக்டர்கள், இவர்களுக்கு கீழ் போலீசாரும் பணியில் இருப்பர்.