பதிவு செய்த நாள்
06
மே
2016
04:05
நிச்சயமாக வழிபடலாம். சாஸ்திரங்களில் தெய்வங்களின் வடிவத்தைத்தான் வழிபடச் சொல்லியிருக்கிறது. நாம் வீட்டிலேயே சுவாமி படம் வைத்துள்ளோம். அந்தப் படம், வெறும் பேப்பரா, அட்டையா, பெயின்டா, ஓரங்களில் இரும்பு, கண்ணாடி இதையெல்லாம் நாம் பார்பதில்லை அல்லவா! அதில் உள்ள உருவத்தைத்தான் பார்க்கிறோம். அதனால், பகவானின் உருவத்துக்குத்தான் சாஸ்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறது. பகவானின் உருவம் உலகப் பொருள்களுக்கு அப்பாற்பட்டது. ஆனந்தமயமானது, ஞானமயமானது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. நாமோ, இந்த உலகத்தில் இருப்பதால் நாம் அறிந்த, நமக்குப் பழக்கமான பொருளைக் கொண்டுதான் அந்த வடிவத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நம் கண்முன் நிறுத்துவதற்கு! அதிலும், தெய்விகத் தன்மை பொருந்திய பொருள்கள் என்று, மகரிஷிகள் எட்டுவித பொருள்களை எடுத்துக் காட்டியுள்ளனர். மரங்களில் சிலவகை மரம், பஞ்ச உலோகங்கள், கருங்கல் என்று பிரிக்கிறார்கள். அவை எல்லாம் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்கான பொருள்கள்.
நம் வீட்டில் வழிபடும்போது, நம் விருப்பத்துக்கு உகந்த வகையில் செய்து வழிபடுகிறோம். சுவாமி படம் போல், நாம் அதற்கு ஆவாஹனம் செய்யவில்லை. அதற்கு உயிரும் கொடுக்கவில்லை வெறுமனே வழிபடுகிறோம். ஆனால், கோயில் என்று வந்துவிட்டால் அங்கு, இதுபோல் கான்கிரீட்டில் செய்யப்பட் உருவங்களை பிரதிஷ்டை செய்ய முடியாது. ஏனென்றால், அதில் இரும்புக் கம்பி கலந்திருக்கும், சுண்ணாம்பு மட்டுமில்லாமல், வேறு வகை வேதிப் பொருட்களும் அதில் கலக்கப்படுகிறது. ஆகையினால்தான், அதில் சற்று எச்சரிக்கை தேவைப்படுகிறது. நாம் வீட்டில் வழிபடுவதற்கு வேண்டுமானால் இதுபோல் சுதையாகச் செய்து வழிபட வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், நிச்சயமாக சுவாமிக்கு நைவேத்யம் செய்யாமல் சாப்பிடக்கூடாது. இது ஒரு வகை மனசில் ஏற்படும் பாவம் பாவனைதான்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள், இந்தப் பொருளிலும் இருக்கிறார் இல்லையா? எனவே, நிச்சயமாக அவ்வாறு வைத்து வழிபடலாம்.